மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது காவல்துறையினர் தண்ணீர் தாரை பிரயோகம் மற்றும் தடியடி தாக்குதல் மேற்கொண்டுள்ளர்.
கொழும்பு நகர மண்டப பகுதியில் இருந்து ஆரம்பமாக இந்த பேரணி சுகாதார அமைச்சுக்கு முன்னால் வந்த போது, பேரணியில் ஈடுபட்டவர்கள் சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைய முற்பட்டனர்.
இதன்போதே காவல்துறையினர் தண்ணீர் தரை பிரயோகம் மற்றும் தடியடித் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது காயமடைந்த 84 பேர் தற்போது தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் பலத்த காயமடைந்திருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட மாணவ சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்ட இந்த எதிர்ப்பு பேரணியை பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாதவாறு முன்னெடுக்குமாறு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.