கினிகத்தேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 220 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயமடைந்துள்ளனர்.
கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து அட்டனிற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பாதெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதோடு, மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு விபத்துக்குள்ளாகியவர்கள் நோட்டன்பிரிட்ஜ், கொட்டகலை, பத்தனை போன்ற பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை காவற்துறை மேற்கொண்டு வருகின்றனர்.