சந்தையில் தேயிலைக்கான உரத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
2 ஆயிரத்து 850 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோகிராம் உரத்தின் தற்போதைய விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேயிலை உர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய 50 கிலோகிராம் உரத்தின் விலை தற்போது 3 ஆயிரத்து 350 ரூபாவாக நிலவுகிறது.
இதனால் சந்தையில் தேயிலை உரத்திற்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு தேசிய பசளை செயலகத்தை தொடர்பு கொண்டு வினவியது.
இதன்போது கருத்து தெரிவித்த அந்த செயலத்தின் உதவி இயக்குனர் சிசிர விஜேசிங்ஹ, நிறுவனங்கள் தன்னிச்சியாக இவ்வாறு விலையை அதிகரிக்க முடியாது என குறிப்பிட்டார்.
அத்துடன், சந்தையில் நிலவும் உரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.