இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்த வருவது குறித்து தேசிய ஏற்றுமதி சம்மேளனம் கவலை வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதி நடவடிக்கைகளின்போது ரூபாவின் பெறுமதியினை ஏற்றுமதியாளர்கள் நிர்ணயிப்பதற்கான சுதந்திரத்தை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ராமல் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளாந்தம் வீழ்ச்சியடையும் நிலையில், இது பொருளாதாரத்தை பாதிக்கும் விடயமாகும்.
எனவே, இந்த விடயத்தை வழமைக்கு கொண்டுவருவதில் இலங்கை மத்திய வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ரூபா வீழ்ச்சி தொடர்பாக அவசர கூட்டம் ஒன்று கூட்டப்பட்டதாக தெரிவித்த அவர், இந்த வீழ்ச்சி காரணமாக மத்திய வங்கி வரவில் லாபம் பெறுவதாக சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது, பெறுமதி சேர் வரி அறவீடு அதிகரிப்பதனால் மத்திய வங்கிக்கு லாபம் கூடுவதாக அந்த கூட்டத்தில் சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை நாணயப் பெறுமதி 110 ரூபா 95 சதமாக இருந்தது.
2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 152 ரூபா 80 சதமாக இருந்த நாணய மாற்று நேற்று முன்தினம் 170 ரூபா 65 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.