ஏதிலி அந்தஸ்து கோரிய நிலையில் இஸ்ரேலிய கிவோன் சிறைக்கூடத்தில் உள்ள இலங்கையர்களை, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதுவராலயத்தை சேர்ந்த அதிகாரிகள் இன்று பார்வையிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகாரத்துறையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சுற்றுலா நுழைவு அனுமதியுடன் இஸ்ரேல் சென்றுள்ள 13 இலங்கையர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளினால் சிறையடைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய 'ஜெரூசலம் போஸ்ட்' ஒரு வாரத்திற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இது தவிர, நீரிழிவினால் பாதிப்படைந்துள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் சிறையடைக்கப்பட்டதன் பின்னர் சட்டதரணிகள் எவரையும் சந்திப்பதற்கான வாய்ப்பு இஸ்ரேலிய நிர்வாகிகளினால் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும், இந்த விடயத்தில் இஸ்ரேலிய தலைநகரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் வேண்டுகோளுக்கு அமைய தற்போது சந்தேக நபர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன.
தூதுவராலய அதிகாரிகள் இன்று சிறையடைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்ததன் பின்னர், அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உடல்நிலை போன்ற விபரங்களை பெற முடியும் என இலங்கை தூதுவர் பீ. செல்வராஜா தெரிவித்துள்ளார்.