இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்கிய முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு குடிபெயர்வது அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்து மியன்மாருக்கு நாடுகடத்தப்படுவதனால் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே இந்த இடம்பெயர்வுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 300க்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம்கள் இவ்வாறு பங்களாதேஷுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலங்களில் ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள் காரணமாக லட்சக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
விசேடமாக பங்களாதேஷில் லட்சக்கணக்கான அகதிகள் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரொஹிங்கிய முஸ்லிம்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் பணியை இந்தியா முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாக குறிப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தியாவில் வசிக்கும் ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் பெருமளவில் அரசாங்கத்தினால் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.