இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை உயர் மட்ட குழுவுடன் தமது பேச்சுவார்த்தைகளை நாளை ஆரம்பிக்கின்றனர்.
இலங்கைக்கு எஞ்சிய கடன் உதவியை வழங்குவது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தைகள் அமையவுள்ளன.
எஞ்சிய நிதி உதவி வழங்குவது தொடர்பாக கடந்த நொவம்பர் மாதம் தீர்மானிக்கப்பட இருந்த போதிலும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் பிற்போடப்பட்டன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரத்தன்மையை அடுத்தே முக்கிய கூட்டம் பிற்போடப்பட்டது.
இதன் பின்னர், கடந்த டிசெம்பர் மாதம் அரசியல் நிலைமை மீள ஸ்திரத்தன்மை அடைந்த நிலையில், நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி ஆகியோர், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகாட்டை வாஷிங்டனில் சந்தித்து உரையாடியிருந்தனர்.
இந்த சந்திப்பினை அடுத்து சர்வதேச நாணய நிதியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.