உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தாம் முன்னிலையாகப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஊடகப்பிரதானிகளுடன் சற்று முன்னர் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கையானது அலரிமாளிகையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு நாடகம் எனவும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
குறித்த குழுவில் புலனாய்வு துறையை சேர்ந்த உறுப்பினர்கள் சாட்சியம் வழங்கியதை ஊடகங்களில் நேரடியாக ஔிப்பரப்பியமைக்கு ஜனாதிபதி எதிர்ப்பினை வௌிப்படுத்தியதோடு, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நிறுத்துமாறும், நிறுத்தாவிட்டால் தாம் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.
அத்துடன், ஜனாதிபதி அமைச்சரவை கூட்டம் ஒன்றினையும் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெறும் நடவடிக்கைகளுக்கு அழைக்கப்படுவார் என அக்குழுவின் உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் ஜாஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே தாம் குறித்த குழுவில் முன்னிலையாகப்போவதில்லை என அறிவித்துள்ளார்.