ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இன்று இலங்கை புலனாய்வுத்துறை பிரதானிகள் சாட்சியமளிக்க உள்ளனர்.
தேர்வுக் குழு இன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரை கூடுகிறது.
அதன்படி தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர், சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சானி அபேசேகர ஆகியோர் குழு முன் சாட்சியமளிப்பார்கள்.
அதேநேரம், பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் காவற்துறை பரிசோதகர் தரங்க பதிரன ஆகியோரும் சாட்சி வழங்கவுள்ளனர்.
புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களிடம் இன்று ரகசிய சாட்சிப் பதிவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
இது தொடர்பாக சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்றும் பிரதி சபாநாயகர் கூறினார்.
அதேநேரம், புலனாய்வுத்துறை தலைவர்களின் படங்கள் யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல்21 தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவுக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.