கொவிட் 19 தொற்று பரவுவதால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தி வரும் நிலையில் உலகலாவிய ரீதியில் பங்குச் சந்தைகள் குறிப்பிடத்தக்களவு சரிவடைந்துள்ளன.
அமெரிக்க டோவ் - ஜோன்ஸ் தொழிற்துறை பங்குச் சந்தை குறியீட்டு எண் நேற்றைய தினம் ஆயிரத்து 200 புள்ளிகள் சரிந்து வரலாற்றில் பாரியளவான சரிவை சந்தித்தது.
அத்துடன் எப்பல், போயிங் மற்றும் மைக்ரோசொப்ட் உள்ளிட்ட அனைத்து பாரிய நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளன.
எனினும் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் முகத்திரைகளை உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனம் ஒன்றின் பங்குகள் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்க பங்குச் சந்தையுடன் பிரித்தானியாவின் லண்டன், ஜேர்மனியின் பிராங்போட் மற்றும் பிரான்சின் பாரிஸ் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் நேற்றைய தினம் சரிவடைந்துள்ளது.
இதேவேளை தென்கொரியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 256 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கமைய அந்த நாட்டில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் அங்கு இந்த தொற்றால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் சீனாவிற்கு வெளியே தென்கொரியாவிலேயே அதிகளவானவர்கள் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கமைய அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தென்கொரியாவிற்கான சுற்றுலா எச்சரிக்கையை விடுத்துள்ளன.
அதேநேரம் தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையில் இன்று ஆரம்பமாகவிருந்த ஒன்றிணைந்த போர் பயிற்சி பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை சர்வதேச ரீதியில் கொவிட் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளதுடன் 83 ஆயிரத்து 389 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.