யாழ். கே.கே.வீதி குளாவடி சந்திக்கு அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜந்து பொலிஸ் அதிகாரிகளை குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 11.55 மணிக்கும் அதிகாலை 12.05 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காங்கேசன்துறை வீதியூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது குளப்பிட்டிப் பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரனை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை கண்டறியப்பட்டிருந்தது. இதனையடுத்து இச் சம்பவமானது யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனைகளின் அடிப்படையில் குறித்த பகுதியில் இரவு நேர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர். இதன்படி யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் காண்ஸ்டபிள் இருவரும், சாஜன் ஒருவரும் சாரதி ஒருவருமாக ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜந்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது குற்றப்புலனாய்வு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் இன்று யாழில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சூரியனின் யாழ் பிராந்திய செய்தியாளர் பிரதீபன் (யாழ். தீபன்)
Follow US
Most Viewed Stories