பாதாள உலக குழு தலைவர் சமயங் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்வதற்காக பயன்படுத்திய சிற்றூர்தியை திருடுவதற்கு ஆதரவளித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நேற்று எஹலியகொட பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜகத் இந்திக குமார எனப்படும் 'பொடீ' எம்பிலிபிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேரை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினாலும், ஆள் ஒருவர் கடத்தப்பட்டமை மற்றும் மேலும் சில குற்றச்செயலுக்காக எம்பிலிபிட்டி காவற்துறையாலும் முன்னதாக அவர் கைது செயய்ப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கமைய அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தி கடந்த பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி சீதுவை பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Follow US
Most Viewed Stories