மாகாண சபை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் விவாதம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் ஒருவர் தொடர்பில் எழுப்பிய வினா ஒன்றுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பதிலளிக்கும் போதே இந்த வாத நிலை தோன்றியது.
இதனையடுத்து பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்ஹ விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தினார்.
நாடாளுமன்றத்துக்கு விடயங்களை பெற்று கொள்ள அதிகாரம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
13 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன.
இலங்கையில் மட்டுமின்றி பல நாடுகளில் அதிகார பகிர்வின் பின்னர் அந்த அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்புக்கள் குறித்து சம்பிரதாய வரம்புக்கள் இருக்கின்றன.
எனினும், இலங்கையில் இன்னும் அது குறித்த இறுதி முடிவு எட்டப்படாமையினால் கட்சி தலைவர்களை அழைத்தே முடிவு எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபைகளின் விடயங்களை பெற்று கொள்வதற்கு முதலமைச்சர் ஊடாக செயற்பட முடியுமா? அல்லது வேறு என்ன அடிப்படையில் அமைச்சரால் மாகாண சபைகள் தொடர்பில் தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட முடியும் என்பது குறித்து இதன்போது ஆராய முடியும்.
கட்சி தலைவர்கள் இது தொடர்பில் முடிவு ஒன்றை எடுத்த பின்னர் மாகாண சபை விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குறித்த ஒரு வரம்புக்கள் இருந்து கொண்டு விவாதத்தை நடத்த முடியும் என பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் இன்று புதிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதை நிதி மற்றும் ஊடக அமைச்சருமான மங்கள சமரவீரவும் ஒருவராவார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இன்று முதலாவது இடையீட்டு கேள்வி எழுப்பபட்டது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்த இடையீட்டு கேள்வியை எழுப்பினார்.
எனினும் அந்த கேள்விக்கு இரண்டு வார காலப்பகுதியில் பதில் அளிப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதன்பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் நாடு என்ற அடிப்படையில் முன்னேறி செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மாற்றம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் நாடு முன்னேறி செல்வதற்கு அமைச்சர் மங்கள சமரவீரவின் வெளிநாட்டு அமைச்சு பதவி தடையாக இருந்ததா? என்ற கேள்வி எழுவதாக அவர் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இரண்டு பக்கத்தை கூறுப்போடும் வகையிலேயே வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, முகமாலை பகுதியில் அண்மையில் காவற்துறை வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் விசாரணை முடிவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவினார்.
இதற்கு பதிலளித்த சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க, காவற்துறை நிலையத்தின் மீதோ அல்லது காவற்துறை வாகனத்தின் மீதோ தாக்குதல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.
காவற்துறை வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் மீதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் விசாரணைகளை காவற்துறையின் ஐந்து குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.
விசாரணையின் முடிவில் அது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, பிலியந்தலையில் காவற்துறை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய பாதாள உலக குழு தலைவர் ஒருவர் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறினார்.
Follow US
Most Viewed Stories