வெகு விரைவில் கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டானில் இன்று இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டபோது சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளபோதும் அதனை விடுவிக்கும் காலத்தை உறுதியாக கூற முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்றுமுன்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்மந்தன் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது, குறித்த காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவ படைக்கட்டளை தலைமையகம் முன்பாக இன்று 117 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம் இன்று 126 வது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 110 ஆவது நாளாக தொடர்கின்றது.
இதுதவிர, வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் இன்று 122 ஆவது நாளை எட்டியுள்ளது.
Follow US
Most Viewed Stories