ஒரு தீக்குச்சியினால் பாரிய தீ உருவாவது போல், இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
இந்தநிலைக்கு அரசியல் வாதிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடா? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்கு கூறவேண்டும்.
இலங்கையின் தேசிய கொடி தொடர்பில் பல்வேறு தர்க்க ரீதியான விவாதங்கள் இருக்கலாம்.
எனினும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அனைவரும் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது கட்டாயமானது.
வடக்கு மாகாண அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை புறக்கணித்தமை வெளிப்படையாக இனவாதத்தை சுட்டி நிற்கின்றது.
இந்த இனவாதம் வடக்கில் இருந்து உருவாகின்றதா..? அல்லது தெற்கில் இருந்து உருவாகின்றதா என்பது அவசியமானதல்ல.
இனவாதம் என்பது மேலும் இனவாத்தை போசிப்பதாகவே அமைகின்றது.
தமிழ் இனவாதம் வலிமைப்பெறுகின்ற போது, அதற்கு எதிராக சிங்கள இனவாதமும் வலிமைப்பெறும்.
எனவே தேசிய நல்லிணக்கத்தின் மூலமே இனவாத்தை தோற்கடிக்க முடியும்.
அத்துடன் இனவாதத்தை தோற்கடிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் என அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இனவாதத்தை வலியுறுத்தி அரசியல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நாடு பிளவுப்படுவதாக கூறி பொய்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கிலும் இனவாதத்தை வலியுறுத்தும் தரப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயல்பட்டு வருவதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories