பாகிஸ்தான் இராணுவத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டிருந்தது.
இதனிடையே, காஷ்மீரில் மூன்று காவல்துறையினர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கத்தால் கடத்திக் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலை பாகிஸ்தான் இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவம் மீதும், தீவிரவாதிகளின் செயல்களுக்கும் பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பதில் கருத்தை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர், தமது நாட்டு இராணுவம் இதுபோன்ற செயல்களில் எவ்விதத்திலும் ஈடுபடாது என்று கூறியுள்ளார்.
போருக்கு தாங்கள் தயாராகவே உள்ளதாகவும், எனினும், பாகிஸ்தான் மக்களின் நலனையும், அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நலன் கருதி அமைதி வழியில் செல்லவே விரும்புவதாகவும் பாகிஸ்தான் இராணு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
Follow US
Most Viewed Stories