ஜனாதிபதிக்கு சபாநாயகர் பதில் கடிதம்

Thursday, 15 November 2018 - 19:45

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
அரசியலமைப்பு, நிலையியற் கட்டளை மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயம் என்பனவற்றைக் கருத்திற்கொள்ளாமல் சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்பட்டதாக தெரிவித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிப்பிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து, சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு, ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதில், குறித்த அவநம்பிக்கை பிரேணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது, சபாநாயகர் நாடாளுமன்ற மரபுகள், நிலையியல் கட்டளைகள் மற்றும் அரசியல் யாப்பு என்பனவற்றை மீறி செயற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தங்களது செயற்பாடுகள் இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே என்னால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அரசியலமைப்பிலும் நிலையியற் கட்டளைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளாது நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரதமர் ஒருவரை நியமிக்கும் வேளையில், எனது கருத்திற்கு அமைவாக நாடாளுமன்றத்தில் அதிகபட்ச நம்பிக்கையினைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடு காணப்படுவதுடன், பிரதமருக்கு அல்லது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை காணப்படுகின்றது என்பதையோ அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நாடாளுமன்ற சம்பிரதாயமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் நாடாளுமன்றத்தினால் உரியவாறு அத்தாட்சிப்படுத்தப்படாத கையொப்பங்கள் அடங்கிய ஆவணமொன்றினை எனக்கு அனுப்பி வைத்ததன் ஊடாக குறித்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென உறுதிப்படுத்துவதற்கு தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி தொடர்பிலும் நான் கவலையடைகின்றேன்.

அவ்வாறே, 2015 ஜனவரி 09 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவம் செய்த டி.எம். ஜயரத்னவிற்கு சார்பாக நாடாளுமன்றத்தில் 162 ஆசனங்கள் காணப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு நாடாளுமன்றத்தில் 41 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் வேண்டுகோளுக்கு அமைவாக நியமித்தேன் என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.

என்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டனவா என்பதை நிர்ணயம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் முயற்சித்தலானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக மற்றும் அதற்கே உரித்தான அதிகாரங்களை மீறிச்செயற்படும் நடவடிக்கையாகும் எனவும் அதனூடாக நீங்கள் அரசியலமைப்பு தொடர்பில் உரியவாறு கவனம் செலுத்தவில்லை என்பதும் தெளிவாகின்றது.

இறுதியாக சபாநாயகராக நியமிக்கப்படும் ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவம் செய்பவராக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பினும் மாட்சிமை மிக்க நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக சுயாதீனமாக செயற்பட வேண்டிய பொறுப்பினை வருத்தத்துடன், தங்களுக்கு ஞாபகப்படுத்த நேர்ந்துள்ளது.

தங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் முதலாவது பிரேரணையாக குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகிய குறித்த நியமனம் மற்றும் கட்டளை அரசியலமைப்பிற்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ள பிரகடனத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன்.

குறித்த முதலாவது பிரேரணை தொடர்பில் நான் மேற்கொண்ட நடவடிக்கை அரசியமைப்பிற்கு ஏற்புடைய, சட்ட ரீதியான தீர்மானமாகும்.

தங்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தின் மூலப்பிரதியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட திகதி அழிக்கப்பட்டு அதன் மீது நவம்பர் 14 ஆம் திகதி என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பிற்கு அமைவாக பிரதமர் ஒருவரை நியமிக்கும் பூரணமான அதிகாரத்தைக் கொண்டுள்ள நியமிப்பு அதிகாரி ஜனாதிபதியே ஆவார் என்பதையும் தங்களுக்கு தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பான பதில் கடிதத்தை அனுப்பியுள்ள சபாநாயகர், நேற்றைய தினம் நாடாளுமன்றில் 122 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு அனுமதித்த யோசனையை ஜனாதிபதி சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

122 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலான கட்சிகள் உட்பட, புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் அடங்குவதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்ட அரசியலமைப்பு ரீதியான மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் தெளிவை ஏற்படுத்தி, சட்டவல்லுநர்களின் ஆலோசனையுடன், பதிலளிக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips