2015 ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று மீண்டும் கூடியது.
இதன்போது 48 முறைப்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்ட நிலையில், அவற்றுள் இரண்டு முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் நாட்டில் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்காக குறுகிய கால அடிப்படையில் மேலதிக மின்சார கொள்வனவு மேற்கொள்வதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், நிறுவன பொதுச் சொத்துகள் பாதுகாப்பு அமைப்பினால், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை பணிப்பாளர் பதவி மற்றும் அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை என்பன தொடர்பில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்து விசாரணைகளுக்காக காவல்துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உதவி காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், குறித்த விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறைமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதுடன், முதலாவதாக இடம்பெறும் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பான சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
Follow US
Most Viewed Stories