ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று, அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் இடம்பெறுவதை தவிர்க்க விசேட பாதுகாப்பு படை பிரிவு ஒன்றை ஸ்தாபித்தோம்.
பின்னர் அவர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் அவர்கள் தங்களது புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பல தகவல்களை வெளிப்படுத்தினார்கள்.
அதற்கு அமைச்சரவையில் இருந்த சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என அவர்களை எச்சரிக்கை விடுத்தனர் .
இவ்வாறான தவறுகள் காரணமாகவே ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது.
எவ்வாறாயினும் தமது ஆட்சியின் ஊடாக அந்த நிலையை மாற்றியமைப்போம்.
அந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, தங்களது ஆட்சியில் மண்டபங்களை அமைத்தோம், அதற்கான கதிரைகளை வழங்குவதற்கே தற்போதைய அரசாங்கத்திற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டது.
இவ்வாறானவர்களின் கைகளில் எவ்வாறு அரச பொறுப்புக்களை வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
Follow US
Most Viewed Stories