நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பதிவு சோதனைக்காக இன்று அரச இரசாயண பகுப்பாய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
நுகேகொடை நீதவானினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இறுவட்டுகள், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன கொழும்பு குற்றவியல் பிரிவினரால், அரச இரசாயண பகுப்பாய்வகத்திடம் கடந்த 9ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் உள்ள வீட்டிலிருந்து, குரல் பதிவுகள் அடங்கிய 9 இறுவட்டுகள், 162 டி.வி.டிகள், மடிக்கணினி, அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பன தொடர்பான முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
நுகேகொடை நீதவானினால் கடந்த 8ஆம் திகதி இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
இவ்வாறான நிலையில், நீதிமன்ற நீதிபதிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை, இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories