ஆப்கான் வான் பரப்பில் தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு துருப்பினருக்கு இனிமேல் வேண்டுகோள் விடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படையினரின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ படையணினரின் யுத்த விமானங்களை கிராமங்களில் சேவைக்கு அமர்த்தும் போது போராளிகளை விட அதிக அளவிலான பொதுமக்களே மரணமாவதாக பல தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான குன்னாரில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலின் போது பெண்கள் குழந்தைகள் உட்பட 10 பொது மக்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த புதிய உத்தரவு குறித்து ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ படையணியினர் எந்த விதமான கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.
ஆப்கானிஸ்தானில், இடம்பெறும் வான் தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் பலியாகும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானிய மக்களுக்கும் நேட்டோ படையணியினருக்கும் இடையே பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படையினர் இணைந்து தாலிபான் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்த காலம் முதல் பல தாக்குதல்களில் பொதுமக்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories