இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வரைவு ஒப்பந்தம் ஆப்கானிஸ்தானிய அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனி கிஷி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு வர்த்தகம் குறித்து தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இலங்கை ஆப்கானிஸ்தானுக்கு இடையே நேரடி வாநூர்தி சேவையினை ஸ்தாபிப்பதன் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மடிக்கணனி மற்றும் பிளக்பெரி கையடக்க தொலைபேசி உற்பத்திக்கு தேவையான தங்கம், செம்பு, மென்னியம் போன்ற பொருட்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள நிலையில், அவற்றை அங்கிருந்து இறக்குமதி செய்ய முடியும்.
இதன் மூலம் குறைந்த விலைக்கு மடிக்கணனி மற்றும் பிளைக்பெரி தொலைபேசிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஆப்கானிஸ்தானில் சுரங்க பணிகளில் ஈடுபட விரும்பும் இலங்கை முதலீட்டாளர்களுக்கு ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் பல உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் அதிக அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதாகவும் ஆப்கானிஸ்தானிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.