விஜய் நடித்த, மெர்சல் படம், பல்வேறு தடைகளை தாண்டி, தீபாவளிக்கு வெளியானது. அதன், இறுதி காட்சியில், ஏழு சதவீதம், ஜி.எஸ்.டி., வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு, பொதுமக்களுக்கு, இலவச மருத்துவ வசதி அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில், 28 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலித்தாலும், இலவச மருத்துவம் இல்லை என, விஜய் வசனம் பேசி உள்ளார். அதற்கு, பா.ஜ., தலைவர்கள், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட, எச்.ராஜா, நடிகர் விஜய், வருமான வரி ஏய்ப்பு செய்தார் எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
ஆனால், விஜய் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளார் என, அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், 2015ல், நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான் என, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது: நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது. அதை ஒப்புக்கொண்ட விஜய், பிறகு அதற்குரிய வருமான வரியை செலுத்தினார்.
வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது என தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.