தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.
துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அகால மரணமடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் கணவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர், மகள் குஷி இருவரும் உயிர்பிரியும் போது உடனிருந்திருக்கிறார்கள்.
மூத்த மகள் ஜான்வி திருமண விழாவுக்கு செல்லாததால் மும்பை இல்லத்தில் இருந்திருக்கிறார்.
54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர்.
தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி சிவாஜி, ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்தவர்.
இயக்குனர் பாலச்சந்தரின் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி. மத்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ(2013), ஃபிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான ‘MAMI’ உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.