11ஆவது ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் ப்ளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெறும் இறுதி அணியை தீர்மானிக்கும் முக்கிய போட்டிகளாக அமைந்துள்ளன.
புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள ஐதராபாத் மற்றும் 16 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் 3ஆம் இடங்களில் உள்ள சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ப்ளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலான மூன்று அணிகளுள் ப்ளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் இறுதி அணி எது என்பது இன்றைய போட்டிகளில் தீர்மானிக்கப்படவுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், 12 புள்ளிகளுடன் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் இன்றைய தினம் தமது இறுதிப் போட்டிகளில் விளையாட உள்ளன.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 4 மணிக்கு இடம்பெற உள்ளது.
புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ப்ளே ஓப் சுற்றுக்கான தகுதியை இழந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன் ஊடாக மும்பை இந்தியன்ஸ் அணி, ப்ளே ஓப் சுற்றுக்கான தகுதியை பெறும் வாய்ப்புள்ளது.
இதேநேரம், இன்றிரவு சென்னை அணியுடன் இடம்பெறவுள்ள ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றால், அந்த அணியும் ப்ளே ஓப் சுற்றுக்கான தகுதியைப் பெறும் வாய்ப்புள்ளது.
எவ்வாறிருப்பினும், ஓட்டவிகித சராசரி அடிப்படையில், சிறந்த வெற்றியை பெறும் அணியே ப்ளே ஓப் சுற்றுக்கு இறுதி அணியாக தகுதிபெறும்.
இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ப்ளே ஓப் சுற்றுக்கான தகுதியைப் பெறும் வாய்ப்புள்ளது.