தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக கருதப்படுபவர் நயன்தாரா.
சிம்பு, பிரபுதேவா , உதயநிதி என பல சர்ச்சைகளில் சிக்கினாலும் இன்றும் அவரே தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில் நயன் தாராவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடப் போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் அவர் மதுபானக் கடையொன்றில் பியர் வாங்குவது போன்ற காட்சி இணையத்தில் வெளியாகியமையாகும்.
நயன்தாரா, நிஜமாகவே சென்று பியர் வாங்கினாரா என்று பலரும் விவாதிக்க தொடங்கிய நிலையில், அவர் நடித்து வரும் ஒரு படத்தில் தான் இந்த காட்சி இடம்பெறுவதாக பின்னர் தெரியவந்தது.
இந்தக்காட்சியை படமாக்கியபோது அதை யாரோ கையடக்கத் தொலைபேசியில் திருட்டுத் தனமாக எடுத்து இணையத்தளத்தில் பரப்பிவிட்டனர்.
நயன்தாரா படத்திற்காகத்தான் பியர் வாங்கினார் என்றாலும் அதை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகிவிட்டனர் இந்து மக்கள் கட்சியினர்.
இதுகுறித்து அந்த கட்சியின் சென்னை மண்டல செயலாளர் வீரமாணிக்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
"தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. மேலும் தமிழகத்தில் மதுகுடித்து இறந்து போன ஆண்களின் எண்ணிக்கை 20 இலட்சம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
இந்தசூழலில் நடிகை நயன்தாராபீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. மேலும் பெண்களை குடிக்க தூண்டுவது போல் இந்த காட்சி உள்ளது, எனவே இந்தக்காட்சியை சம்பந்தப்பட்ட படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் நயன்தாராவுக்கு எதிராகவும், அந்தப்படத்திற்கு எதிராகவும் நாங்கள் போராட்டம் நடத்துவோம்" என்று கூறியுள்ளார்.
-இந்திய ஊடகம்