நேற்று கொரோனா வைரஸ் தொற்றுறுதியான நிலையில் அடையாளம் காணப்பட்ட 150 பேரில் 92 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எமது செய்திப் பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் நேற்று கொரோனா தொற்றுறுதியானவர்களில் 5 பேர் அண்மையி;ல் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றுறுதியான 53 கடற்படை சிப்பாய்கள் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினமும் அதிகளவான பி.சீ.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும் எனவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினமே கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் தொற்றுதியாகியிருந்த 732 பேர் பூரணமாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக 20 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
இவ்வாறு குணமடைந்துள்ளவர்களில் வெலிசரை கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனையர்கள் முல்லேரியா, மினுவாங்கொட மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தொற்றுறுதியான 727 பேர் தற்போது சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு முகக்கவசங்ககை அணிவிப்பதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஆலோசனைகள் சுகாதார அமைச்சின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 46 துறைகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் மூன்று முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதற்கு கற்று கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை சுகாதார சட்டங்களின் அடிப்படையில் முகக்கவசங்கள் உரிய முறையில் அணியப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.