கொவிட்-19 காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இதன்படி, ஜுன் மாதம் 29 ஆம் திகதி பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்கப்படவுள்ளன.
குறித்த தினத்தில், அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட குழாமினர் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம், மீள் திட்டமிடல், பெற்றோர் சங்கங்களுடன் கலந்துரையாடல் என்பன இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக ஜுலை மாதம் 6 ஆம் திகதி முதல் 17 வரை தரம் ஐந்து, 11, 13 ஆகிய தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
மூன்றாம் கட்டமாக ஜுலை 20 முதல் 24 வரை 10 மற்றும் 12 தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பவுள்ளன.
நான்காம் கட்டமாக ஜுலை 27 முதல் 3, 4, 6, 7, 8, 9 ஆகிய தரங்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை
இதேவேளை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையை செப்டம்பர் மாதம் 7 ஆம்; திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறையளித்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன.
இந்தக் காலப்பகுதியில் பாடசாலை கட்டமைப்பில் மாத்திரம் 43 இலட்ம் மாணவர்களும், அதற்கு மேலதிக சரவதேச பாடசாலைகள், அறநெறிகள் மற்றும் பகுதிநேர வகுப்புகள் என 50 இலட்சம் மாணவர்கள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் பாடசாலைகளுக்கு விடுமுறையளித்தபோது இருந்த நிலைமை தற்போது இல்லை.
இந்த நிலையில், பாடசாலைகளை எப்போது மீள ஆரம்பிப்பது? உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை எப்போது நடத்துவது என்பது குறித்து கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவையுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 13 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மார்ச் 17 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.
இந்த நிலையில், மார்ச் 17 ஆம் திகதி இருந்த உலகமோ, நாடோ பாடசாலையோ, மாணவர்களோ தற்போது இல்லை.
அனைத்தும் மிக விரைவாக மாற்றமடைந்தன.
மார்ச் 17 ஆம் திகதி தங்களது பிள்ளையின் கைகளில் ஸ்மாட் கைபேசிகளை வழங்க அஞ்சிய தாய், தந்தையர். தற்போது தங்களது கைபேசிகளை வீட்டில் வைத்துவிட்டு, இணையதளம் மூலம் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு வாய்ப்பளித்து அலுவலகம் செல்கின்றனர்.
இது பாரிய மாற்றமாகும். முழு உலகமும் இவ்வாறுதான் உள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் உலகில் இவ்வாறான விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்களால் காணக்கூடிய நிலை இதுவாக உள்ளது.
எனவே, இணையதள முறைமைக்கு அஞ்ச வேண்டாம் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இணையதள முறைமை, அனைவருக்கும் பிரவேசிக்கக்கூடியதாக இல்லாத நிலையில், அதற்கு தீர்வு காணவேண்டும்.
டிஜிட்டல் எனப்படும் எண்மான தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்வதற்கான உட்கட்டமைப்பு சேவைகளை ஆராய வேண்டியுள்ளதுடன், புதிய தடங்களை கொண்டுவர வேண்டும்.
டேட்டா வசதிகளைப் பெறுவதில் மாணவர்களுக்கு சலுகைகளை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, 21 ஆவது நூற்றாண்டின், 3 ஆவது தசாப்தத்தில், இணையதளத்தை எதிரியாக சித்தரித்து, அச்சமூட்ட வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்க பாடசாலைகள் ஆரம்பிக்கும் முறையிலேயே கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய கத்தோலிக்க கல்வி பணிப்பாளர் ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.