'ஆட்டோகிராஃப்' பட புகழ் பிரபல பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
'ஆட்டோகிராஃப்' படத்தில் ’'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’' என்ற பாடல் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் பாடகர் கோமகன். இந்த பாடலில் 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்..' என்ற வரிகளைப் பாடியிருப்பார்.
பல்வேறு கச்சேரிகளில் பாடிவந்த இவருக்கு இயக்குநர் சேரன் தன்னுடைய படத்தில் வாய்ப்பு வழங்கினார்.
தமிழ்நாட்டின் நாகர்கோவிலை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் சென்னை மாதவரத்தில் இயங்கும் தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணியாற்றிவந்தார்.
அங்கு மொபிலிட்டி இன்ஸ்ட்ரக்டராக (விழித்திறன் சவால் கொண்டவர்களுக்கு கோல் வைத்து நடக்கப் பயிற்சி தருபவர்) பணிபுரிந்த அனிதா என்பவரை இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சிறு வயது முதலே நன்றாகப் பாடும் திறமை பெற்றிருந்த கோமகன் விழித்திறன் சவால் கொண்டவர்களை கொண்ட‘கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.
பின்னர் சேரன் பட வாய்ப்புக்குப் பிறகு சினிமாவில் ஒரு சில படங்களில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது கச்சேரியும் நடத்தி வந்தார். அண்மையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
இந்நிலையில் அவர் கொரோனாவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை1 மணியளவில் காலமானார்.