நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு காரணமாக, சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பன கடுமையான சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் முன்பு இல்லாதவாறு தற்போது சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. அவ்வாறே, இந்த சட்டவிரோத உற்பத்திகளுக்கு அதிகளவான விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த முறைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக சட்ட அனுமதியுடனான மதுபானங்களை நியாயமான விலைக்கு வழங்குவதற்காக பல நிறுவனங்களும், தனிநபர்களும் மதுவரித் திணைக்களத்திடம் கோரியிருந்தனர் என ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, இதற்கு அனுமதி வழங்கக்கூடிய இயலுமை காணப்படுகிறதா என அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளும நடைமுறைக்காக நிதியமைச்சுக்கு கடிதமொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ள போதிலும், நிதியமைச்சு இந்த கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானத்தை அருந்தியதன் மூலம் பல சந்தர்ப்பங்களில் அதிகளவானோர் உயிரிழந்ததை காணக்கூடியதாக இருந்தது.
பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில், 50க்கும் அதிகமான சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அவற்றை நடத்திச்சென்ற நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக, சட்டவிரோத மதுபானங்களை கொள்வனவு செய்வதிலிருந்து பொதுமக்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளார்.