ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். புதிய அரசு அமைப்பதில் தங்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை என்றும் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான் அமைப்பினருக்கும், அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வந்தது.
இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தலிபான்கள் அமைப்பின் துணைத் தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கானின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்காக தலிபான்களின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினரில் புதிய அரசு எப்படி அமைய வேண்டும், அதில் யார் யார் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.