நடந்துமுடிந்த இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபது20 போட்டிகளின்போது, இலங்கை அணியின் சில வீரர்கள் வேண்டுமென்றே குறைவான ஆற்றல்களை வெளிப்படுத்தி போட்டியை தோல்விக்கு இட்டுச்சென்றதாக சில ஊடகங்களில் வெளியான தகவல்களை தாம் நிபந்தனைகளின்றி முற்றாக நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தலொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
அவ்வாறான, கிரிக்கெட் வீரர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அணிநிர்வாகத்திடமிருந்தோ, வேறு தரப்பினரிடமிருந்தோ இதுவரை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அந்த அறிவித்தலில், தென் ஆபிரிக்க அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரை வெற்றிகொண்ட இலங்கை குழாமே அவ்வணியுடனான இருபது20 தொடரிலும் பங்குபற்றியது.
இந்த ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி, தென் ஆபிரிக்க அணியை வெற்றிக்கொண்டது மாத்திரமல்லாது உலகக் கிண்ணப் போட்டிக்கு அவசியமான லீக் போனஸ் புள்ளிகளை பெற்று, ஒருநாள் சர்வதேச அணிகளுக்கான தரப்படுத்தலில் முன்னோக்கி நகரக்கூடியதாக இருந்தது.
அவ்வாறிருக்கையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பல்வேறு ஊடகங்கள் அறிக்கையிடுவதானது வீரர்களின் மனநிலைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அது எதிர்வரும் இருபது20 உலகக்கிண்ணப் போட்டி தொடருக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறே, தற்போது, புதிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அனுபவமிக்க வீரர்களின் கூட்டணியில் இலங்கை அணி சரியான பாதையில் பயணிப்பதாகவும், கடந்த காலப்பகுதியினுள் இலங்கை அணி வெற்றிகளை குவித்து வருவதனை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நேர்மறை எண்ணங்களுடன் வரவேற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக ஒழுக்கநெறி மற்றும் சட்டங்களை மீறும் வகையில், எவ்வித ஆராய்வும் இன்றி மேற்கொண்ட இவ்வாறான உண்மையற்ற வெளிப்படுத்தல்களால் எதிர்வரும் போட்டிகளுக்கான தயார்ப்படுத்தல்களில் பாதிப்பு ஏற்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.