'மெட்டி ஒலி' தொடரின் புகழ், உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவால் தமது 40ஆவது வயதில் இன்று(17) காலமானார்.
2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரை இந்தத் தொடர் ஒளிபரப்பானது. இப்போதும் இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4ஆவது மகளாக நடித்திருந்தவர் உமா மகேஸ்வரி. இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு 'வெற்றிக் கொடி கட்டு', 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், 'ஒரு கதையின் கதை', 'மஞ்சள் மகிமை' உள்ளிட்ட தொடர்களிலும் உமா மகேஸ்வரி நடித்துள்ளார். இவருடைய கணவர் முருகன் கால்நடை மருத்துவராக இருக்கின்றார்.
திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல், குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். இதற்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
உமாவின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.