நாட்டில் மதுபானங்களின் பாவனை 30%இனால் குறைந்துள்ளதாக கோபா எனப்படும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் (COPF) தெரியவந்துள்ளது.
அந்தக் குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை எட்டுவதற்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும்அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கான எதனோலின் அளவை வரையறுத்துள்ளமை, டீசல் மற்றும் உலை எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இன்னல்களுமே இதற்கான காரணங்களாகும் என அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மதுபானங்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார இன்னல்களே மதுபான பாவனை குறைந்துள்ளமைக்கான பிரதான காரணமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக சட்டவிரோத மதுபான தயாரிப்புக்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.