தமிழகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாக இருந்த பலகுரல் கலைஞர் கோவை குணா உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பால் இன்று (58) காலமானார்.
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் ஊடாக தனித்துவமான திறமைகளால் பிரபலமடைந்தவர் கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் 'சென்னை காதல்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியில் முதன்மை போட்டியாளராக வெற்றிபெற்ற இவர், ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை பிரதி செய்வதில் புகழ்பெற்றவர்.
குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றோரின் குரலையும் அவர்களின் உடல் மொழியையும் கச்சிதமாக வெளிப்படுத்தும் திறமை படைத்தவர்.
சின்னத்திரை மட்டுமன்றி ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயல் இழந்த நிலையில் கடந்த ஓராண்டாக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று (மார்ச் 21) உயிரிழந்தார்.