இறக்குமதி பால்மாவின் விலை இன்றுமுதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும் உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய முடியாது என உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினாலும், 400கிராம் பால்மா ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஆயிரத்து 240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால்மாவின் விலை ஆயிரத்து 160 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை மூவாயிரத்து 100 ரூபாவிலிருந்து இரண்டாயிரத்து 900 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், உள்நாட்டில் பால்மாவை உற்பத்தி செய்யும் மில்கோ நிறுவனம் மற்றும் பெலவத்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் எமது செய்தி சேவை வினவியது.
தற்போது விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாளொன்றுக்கு 12 லட்சம் லீற்றர் பால் கிடைக்கப்பெறும். அது தற்போது, 5 லட்சம் லீற்றராக குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக உள்நாட்டு பால்மா விலையை குறைக்க முடியாது என மில்கோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டாலும், உள்நாட்டு பால்மா விலையை குறைக்க வேண்டிய அவசியமில்லை என பெலவத்த பால்மா உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் ஆரிஷீல விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.