நாடாளுமன்ற கட்டளைச் சட்டத்துக்கு ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கான சட்ட வலு இல்லை.
எனவே, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கும் அதிகாரம் இல்லை என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்க, தமக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனுவின் மீதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த கருத்தை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு பரிசீலித்தது.
இதன் போது, குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் சட்டவிளக்கத்தை வழங்குமாறு தாம் கேட்டுக் கொண்டதுக்கு அமைய உயர் நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கத்தையே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிப்பாக வெளியிட்டது.
இந்த நிலையில் பிரதம நீதியரசர் தாக்கல் செய்த மனுவின் விசாரணை எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.