மேலும் ஒன்று அல்லது இரண்டு அணுகுண்டு சோதனைகளை நடத்தும் தமது திட்டம் குறித்து, வடகொரிய சீனாவிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்வர நிர்பந்திக்கும் வகையில் இந்த அணுகுண்டு சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்களின் படி, குறிப்பிட்ட இரண்டு சோதனைகளும் இந்த வருடத்துக்குள்ளேயே நடத்தப்படவுள்ளது.
இந்த சோதனைகளுடன் மேலும் ஒரு விண்ணோடத்தையும் இந்த வருடம் விண்ணில் செலுத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவுடனும், சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள தரப்பினர் இந்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இது உறுதியான தகவல் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்ததாக மேற்கொள்ளவுள்ள அணுகுண்டு சோதனை, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டதை விடவும் பாரியதாக இருக்கும் என்றும், அண்ணளவாக 10 கிலோ டன் டி.என்.டி அளவில் இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.