சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளர் பதவிக்கான விண்ணப்பத்தை நிசாந்த ரணதுங்க, விளையாட்டுத்துறை பணிப்பாளரிடம் இன்று கையளித்தார்.
திலங்க சுமதிபால நேற்றைய தினம் தலைவர் பதவிக்கான விண்ணப்பத்தை கையளித்திருந்தபோதும், அந்த பதவிக்கு அவர் தகுதி அற்றவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் சீர்த்திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தின்படி, அவர் இந்த பதவியை வகிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
இந்த சட்ட மூலத்தின் 15வது சரத்தின் முதலாவது உப பிரிவின் படீ, ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் சிறிலங்கா கிரிக்கட்டில் பதவி வகிக்க முடியாது.
எனினும் திலங்க சுமத்திபால பல சிங்க பத்திரிகைகளை வெளியிடுபவராக உள்ளார்.
விளையாட்டுத்துறை சார்ந்த உபகரணங்களை உற்பத்தி செய்தல், அல்லது விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் சிறிலங்கா கிரிக்கட்டில் பதவி வகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் புகழ்பெற்ற கொக்குபுரா வகை விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்யும் இலங்கையில் விநியோகிக்கும் நிறுவனத்தை சுமதிபால நடத்திவருகிறார்.
ஊடகங்களுடன் தொடர்புடைய அல்லது, விளையாட்டுத்துறை சார்ந்த உபகரணங்களை விநியோகிப்பவர்களை சிறிலங்கா கிரிக்கட் பதவிகளில் இணைத்துக் கொள்வதில்லை என்று கடந்த ஜனவரி மாதம் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்த அலுத்கமவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திலங்க சுமதிபால சிறிலங்கா கிரிக்கட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றால், அது உள்நாட்டில் மாத்திரம் இன்றி, சர்வதேசரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.