இலங்கை தமிழர்களின் விடயத்தில் இந்தியா தற்போது நெருக்கடிக்கு உட்பட்டிருப்பதாக துக்லக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
எனினும் ஒரு கல்லூரியில் 3000 மாணவர்கள் இருந்தால், அவர்களில் 150 பேர் மாத்திரமே பங்கேற்கின்றனர்.
இதனை முழு சமூகமும் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டமாக கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினை தமிழகத்தில் வாக்குகளை நிர்ணயிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளால் அரசியலுக்கு இறக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூட வலியுறுத்தாத அளவுக்கு, தமிழகத்தில் சில தரப்பினர் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவ்வாறான குழுக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வழங்கப்படுவதாகவும் சோ.ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின்கோரிக்கையையும் அவர் கண்டித்துள்ளார்.
அசாப் குருவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தது.
எனினும் இது பாகிஸ்தானின் வேலை இல்லை என்று இந்தியா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகவும் அவ்வாறான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் போது, இலங்கையும் இதே கருத்தையே தெரிவிக்கும்.
எனவே இலங்கைக்கு எதிராக இந்தியாவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவே தமிழீழ விடுதலைப் புலிகளை வளர்த்துவிட்டது.
விடுதலைப் புலிகளும், யாழ்ப்பாண தமிழர்களும் கடந்தகாலத்தில் அரசாங்கங்களுடன் ஒத்துழைத்திருந்தால், தற்போது இந்த பிரச்சினை இந்த அளவுக்கு போய் இருக்காது என்றும் சோ.ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.