அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணங்கள் குறித்து தொடர்ந்தும் அரசியல் துறையிலும், குடியியல் சமூகத்திலும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதுகுறித்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர்த்தப்பட்ட மின்சார கட்டணங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மின்சக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட கட்டண பட்டியல் மற்றும் அந்த ஆணைக்குழுவினால் திருத்தப்பட்டு மீள வெளியிடப்பட்ட பட்டியல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, மின்சார சபையின் திறனற்ற நிர்வாகத்திற்கு நாட்டின் மொத்த சனத்தொகையும் நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தியுள்ளார்.
இதனிடையே, உயர்த்தப்பட்ட மின்கட்டணம் தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு மத்திய நிலைய தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.