அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டு 12 நாட்கள் கடக்கின்ற நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் வோஷிங்டனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆர்ப்பாட்டகாரர்கள் வெள்ளை மாளிகை பகுதிக்கு செல்ல முற்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்கா மாத்திரமின்றி ஏனைய பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வருவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பிரித்தானியாவில் நேற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 அச்சம் காரணமாக மக்கன் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகின்றது.
இதேவேளை அவுஸ்ரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பன் போன்ற நகரங்களிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் -19 காரணமாக 705 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் மேலும் 22 ஆயிரத்து 598 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய அமெரிக்காவி;ல் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 88 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளதோடு இதுவரையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 95 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்து 66 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை சர்வதேச ரீதியில் 4 லட்சத்து ஆயிரத்து 606 பேர் இதுவரையில் பலியாகியுள்ளன.
எவ்வாறாயினும் 34 லட்சத்து 4 ஆயிரத்து 207 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories