இன்று தன்னிடம் வாக்குமூலம் பதிவுசெய்யவில்லை என விளையாட்டுத்துறை குற்றங்களை ஆராயும் குழுவில் இருந்து வெளியேறிய பின்னர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், முன்னாள் கிரிக்கட் வீரர் மஹேல ஜயவர்தனவை இன்றைய தினம் அழைப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும், பிரிதொரு தினத்தை அதற்காக வழங்குவதாகவும் அந்த விசாரணைக் குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தாம் முன்னிலையாக வேண்டியதில்லை என தமக்கு எந்த தகவலும் வழங்கப்படாத நிலையிலேயே தாம் அங்கு சென்றதாக அந்த குழுவில் இன்று காலை முன்னிலையாவதற்கு முன்னர் மஹேல ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அந்த குழுவில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தனது சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைக் குழுவில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் தனக்கு அறியப்படுத்தப்பட்டதாக மஹேல ஜயவர்தன கூறியுள்ளார்.
எனினும், இன்றைய தினம் முன்னிலாயாக வேண்டாம் என்றும் பிரிதொரு தினத்தை வழங்குவதாகவும் நேற்றரிவு 11.30 அளவில் அவர்கள் தனக்கு அறிவித்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இன்றைய தினம் முன்னிலையாவதில்லை என தான் கூறியதாக சில ஊடகங்களில் இன்று காலை தகவல் வெளியிடப்பட்டதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தான் எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கூறவில்லை என்றும், கிரிக்கட் தான் விரும்புபவர் என்பதனால், அவர்களுக்கு அவசியமானதை பெற்றுக்கொடுப்பதற்கு தனக்கு கடப்பாடு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம், தாங்கள்தான அந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும், வாக்குமூலம் பதிவுசெய்ய பிரிதொரு தினத்தை வழங்குவதாகவும் அந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.
விசாரணை அதிகாரிகளுக்கு இயன்றளவு ஒத்துழைப்பை வழங்குவதாக மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலே பதிவேற்றப்பட்டுள்ள காணொளியில் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ள விடயம்...!
“சாட்சியம் ஒன்றை வழங்குமாறு சட்டத்தரணியினூடாக இந்த விசாரணைப்பிரிவினால் அறிவிக்கப்பட்டது. எனினும் நேற்றிரவு 11.30 அளவில் அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது.
இன்றைய தினம் அல்லாது பிரிதொரு தினத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் என்னால் அவதானிக்க முடிந்தது தனிப்பட்ட காரணத்திற்காக விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நான் என்ன நினைத்தேன் என்றால் ஏதாவது ஒரு விதிமுறையில் இவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று. ஆகையினாலேயே இவர்களுக்கு அறிவித்து விட்டு நான் இவ்விடம் வருகை தந்தேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு தெரிவிக்கவில்லை. நான் கிரிக்கட் விளையாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவன் என்பது மாத்திரமின்றி கௌரவம் கொடுக்கும் நபரும் ஆவேன்.
நான் பொறுப்புடையன் என்றவகையில் அவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். அவர்களே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்ததோடு மாத்திரமின்றி பிரிதொரு தினத்தை பெற்றுத்தருவதாகவும் அறிவித்தனர்.
நான் தயைகூர்ந்து கேட்டுக்கொள்கின்றேன் நான் தெரிவிக்காதவற்றை பிழையான முறையில் வெளியிட வேண்டாம். இலங்கையில் கிரிக்கட் விளையாட்டை எதிர்காலத்திலும் முறையாக கொண்டு செல்ல எனக்கு பொறுப்பிருக்கின்றது. இயலுமானவரையில் நான் எனது ஒத்துழைப்பை விசாரணைகளை முன்னெடுக்கும் தரப்பினருக்கு வழங்க காத்திருக்கின்றேன். பொறுத்திருந்து பார்க்கலாம் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று..”
Follow US
Most Viewed Stories