அவுஸ்திரேலிய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் காலவரையரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிரிக்கட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்தல் காலங்கள் உள்ளிட்ட சில காரணங்களினால் போட்டித் தொடரை ஒத்திவைக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கட் தொடரை ஒத்திவைப்பதே சிறந்த வழி என சிம்பாப்வே கிரிக்கட் நிர்வாகமும் பரிந்துரை செய்திருந்தது.
எனினும் அவுஸ்திரேலிய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடர் பிட்போடப்பட்டாலும் கட்டாயம் இடம்பெறும் என கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.