பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனத்தை, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல், ஆயிரம் ரூபாவாக நிர்ணயிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அத்துடன், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பெருந்தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேயிலை தொழிற்துறையின் தரத்தையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள வரி விலக்கு, உர மானியம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் அதில் உள்ளடங்கும்.
அந்த நிவாரணங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கே கிடைப்பதால், அதன் நன்மைகளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உற்பத்தி மற்றும் கைத்தொழிற் துறை அடையும் முன்னேற்றத்துடன் இணைந்ததாக அதன் நன்மைகள் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.