General16 March 2022

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவரிடம் கையளிப்பு

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம், ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம் இன்று கையளிக்கப்பட்டது.

ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டு ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டதுடன்,  மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம்,  ஐநா மனித உரிமை பேரவை பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவி செய்யவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் அடையாளப்படுத்திக் கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes