அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய அரிசி தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து பெண் ஒருவர் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனாபிட்டிய தெற்கு பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கும் இலவச அரிசி இதுவரை தமக்கு கிடைக்காமை குறித்து சந்தேகநபரான பெண் கிராம உத்தியோகத்தரிடம் வினவியுள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது குறித்த பெண் கிராம உத்தியோகத்தரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கிராம உத்தியோகத்தர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் களுத்துறை - வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இலவச அரிசி விநியோகத்தின் போது பயனாளிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்ட சம்பவமொன்று கட்டான பகுதியில் பதிவாகியுள்ளது.
அரிசி விநியோகத்தின்போது போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு எனக் கூறி பயனாளிகளிடம் தலா 50 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திச் சேவை குறித்த பகுதிக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு அரிசியை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே போக்குவரத்துக்கு பணம் அறவிடப்பட்டுள்ளதாக அவர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories