General11 July 2024

இறக்குவானையில் பிரித்தானியர் பாலத்தை அகற்ற முயற்சி - தடுத்து நிறுத்திய பிரதேச மக்கள்

இறக்குவானையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் ஒன்றை அகற்றும் நடவடிக்கைகள் பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இறக்குவானை - தெனியாய பிரதான பாதையில் அமைந்துள்ள எலட்டன் பாலம் என அழைக்கப்படும் இந்தப் பாலம் சுமார் 116 வருட வரலாற்றைக் கொண்டது.

இந்த பாலத்தை வீதி அபிவிருத்தி பணிகளுக்காக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறு அப்புறப்படுத்தப்படும் பாலமானது, தொல்பொருள் பெறுமதிமிக்கது என்ற அடிப்படையில் அதனை அநுராதபுரம் - மெல்சிறிபுர பகுதியில் மீள நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.



இந்தநிலையில், இறக்குவானையின் அடையாளமாகக் காணப்படும் இந்த பாலத்தை அப்புறப்படுத்த அங்கு எதிர்ப்புக்கள் வெளியாகின.

இதன்படி, இறக்குவானை மகா நாயக்க தேரர் உள்ளிட்ட பிரதேச மக்கள் பாலம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விடயம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.

பாலத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் கூறியதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்பின்னர், காவல்துறையினரின் தலையீட்டில் பாலத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதையடுத்து, பாலத்தை அப்புறப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை வாகனங்களில் ஏற்றி, அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes