கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பில் ஐதராபாத் அணியின் பயிற்றுவிப்பாளர் விளக்கமளித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களான பேர்ஸ்டோ, டேவிட் வோனர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.
கடந்த ஐபிஎல் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆபத்தான நிலையில் இருந்தபோது தனியாளாக துடுப்பாட்டத்தில் அசத்தி அணியின் வெற்றிக்கு பல சந்தர்ப்பங்களில் கேன் வில்லியம்சன் உதவியுள்ளார். அவர் கடந்த வருட தொடரில் 11 போட்டிகளில் 317 ஓட்டங்களை பெற்றார்.
தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான அவருக்கு அணியில் இடம் கொடுக்காதமை குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் கூறுகையில் ‘‘போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கால அவகாசம் தேவை என நாங்கள் எண்ணுகிறோம்.
இன்னும் அதிகமாக அவர் வலைப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவுக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் விளையாடியிருப்பார்.
எனினும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பேர்ஸ்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் சில நாட்களில் கேன் வில்லியம்சன் கட்டாயமாக அணியில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்துகளில்55 ஓட்டங்களை பெற்றார். எனினும், இந்த போட்டியில் ஐதராபாத் அணி 10 ஓட்டங்களில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.