General26 February 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மதத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் உட்பட பொதுமக்கள் பலரும் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதேநேரம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி இன்று மாலை திருகோணமலை மாவட்டத்தில் கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மதத்தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் உட்பட பிரதேச
சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், சிவில் நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கையெழுத்துப் போராட்டமானது திருகோணமலை - காந்திப் பூங்காவில் நாளைய தினம் முற்பகல் 9.30க்கு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தக் கையெழுத்துப் போராட்டம் விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes